Monday, December 19, 2011

இலங்கையில் விடுவிக்கப்பட்ட மீனவர்கள் ராமேஸ்வரம் திரும்பினர்

இலங்கை கடற்படையினர் பிடித்து சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் விடுவிக்கப்பட்டு ஊர் திரும்பினர் .
ராமேஸ்வரத்திலிருந்து கடந்த 28ம் தேதி மீன் பிடிக்க சென்ற தங்கச்சிமடத்தை சேர்ந்த  எமர்சன், அகஸ்டஸ், போல்டெட், பிரசாத், வில்சன்ட் ஆகியோர் மீது போதை பொருள் கடத்தியதாக யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் டிச.,19ல் இலங்கை மல்லாகம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். இவர்களை உடனடியாக விடுதலை செய்ய கோரி தங்கச்சிமடத்தில் மீனவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். மாவட்ட மீனவர் சங்க தலைவர் அல்போன்ஸ் தலைமை வகித்தார். சங்க பிரதிநிதிகள் போஸ், தேவதாஸ், சேசு, எமரேட், சிப்பிசேசு, நிரபராதி மீனவர்களை விடுவிக்கும் அமைப்பின் தமிழக பிரதிநிதி அருளானந்தம் பங்கேற்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இலங்கை கடற்படையால் பிடித்து செல்லப்பட்ட மீனவர்கள் ஜஸ்டின், சந்திரன், ஆலிவர், மாரி, பத்மநாபன் ஆகியோர் விசாரணைக்கு பின் விடுவிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் ராமேஸ்வரம் திரும்பினர்.

தங்கச்சிமடத்தில் மீனவர்கள் உள்ளிருப்பு போராட்டம்



டிசம்பர்  17 2011 சனிக்கிழமை.

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தங்கச்சிமடம் மீனவர்களின் உறவினர்கள் குடும்பங்கள், நேற்று தங்கச்சிமடத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் மீனவர்கள் ஐந்துபேரை இலங்கை கடற்படை பிடித்து அந்நாட்டில் சிறையில் அடைத்தது. இவர்களை விடுவிக்க கோரி நேற்றும் போராட்டம் நடத்த வேண்டும், என சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். இதற்கு தங்கச்சிமடத்தை சேர்ந்த ஒரு தரப்பினர் சம்மதிக்கவில்லை. அப்பிரிவை சேர்ந்த 315 பேர் மட்டும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

மீனவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள், மற்றும் 150க்கும் மேற்பட்டோர் தங்கச்சிமடம் சமுதாயக்கூடத்தில் நேற்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இவர்களை ராமேஸ்வரம் தாசில்தார் கதிரேசன், டி.எஸ்.பி.,மணிவண்ணன் சந்தித்து, "மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக, அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருவதாக கூறி, போராட்டத்தை கைவிட' வேண்டினர். ஆனால் யாரும் கலைந்து செல்லவில்லை. தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கடலுக்கு சென்ற மீனவர்கள் "அரசு நடவடிக்கை எடுத்து வருவதால், உயர் அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க கடலுக்கு செல்வதாக' தெரிவித்தனர்.