Friday, September 20, 2013

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி பாம்பனில் ஆர்ப்பாட்டம்!

 இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி பாம்பனில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வங்கக் கடலில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் சிறை பிடித்து செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இவ்வாறு சிறை பிடித்து செல்லப்படும் மீனவர்கள் மாதகணக்கில் இலங்கை சிறைகளில் அடைக்கப்படுவதும் தொடர் கதையாகி விட்டது.
சமீபத்தில், ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், நாகபட்டினம், காரைக்கால் பகுதிகளை சேர்ந்த 146 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டனர். இதில் காரைக்காலை சேர்ந்த 34 மீனவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் இவர்களின் படகுகள் விடுவிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் தமிழகம் வர மறுத்துவிட்டனர். இதனால் இவர்கள் கொழும்பில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற 19 மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று இரவு சிறை பிடித்து சென்றனர்.
இதனிடையே, இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்கக்கோரி ராமேஸ்வரம் தீவு மீனவர்கள் பாம்பனில் ரயில் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தனர். தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் மீனவர்களின் ரயில் மறியல் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து, மீனவர்கள் தங்கள் போராட்டத்தை ஆர்ப்பாட்டமாக மாற்றினர். இதன்படி இன்று மாலை பாம்பன் பேருந்து நிலையத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நூற்றுக்கணக்கான பெண்கள் உட்பட ஏராளமான மீனவர்கள் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சைமன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர்கள் பேட்ரிக், ஞானசீலன் மற்றும் மீனவர் சங்க தலைவர்கள் என்.ஜே.போஸ், சிப்பி சேசு, சேசு, அடைக்கலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராமநாதபுரம் சட்ட மன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா, கராத்தே பழனிச்சாமி (ம.தி.மு.க). செந்தில்வேல் (சி.பி.எம்), முருகானந்தம் (சி.பி.ஐ), முரளிதரன் (பி.ஜே.பி), டோமினிக்ரவி (நாம் தமிழர் கட்சி) உள்ளிட்ட சர்வகட்சி தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

மீனவர்களின் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து ஏராளமான போலீசார் பாம்பனில் குவிக்கப்பட்டிருந்தனர்.
செய்தி: http://news.vikatan.com/article.php?module=news&aid=19439

No comments: